திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா நூலகத்துக்கு தனது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
DMK MLA Anniyur Siva Donated One Month Salary to Library: திமுகவின் விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா பொது நூலகத்துக்கு தனது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் அருகே அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்க வளாகத்தில் செயல்பட்டு வரும் நூலகத்திற்கு, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூர் அ.சிவா ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள 375 புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.
திமுக எம்.எல்.ஏ அன்னியூர் சிவா
இந்த நன்கொடை, எம்.எல்.ஏ அன்னியூர் சிவா ஒரு மாத சம்பளத்தில் இருந்து வழங்கப்பட்டது. அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள், இன்று மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் நூலகத்திற்கு வழங்கப்பட்டது.
புத்தகங்களின் தொகுப்பை வழங்கிய திமுக எம்.எல்.ஏ
இந்த புத்தகங்களின் தொகுப்பில் சிவில் சர்வீஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தேவையான மனோத்தூண்டும் கல்வி வழிகாட்டும் புத்தகங்கள், வரலாறு, அரசியல், பொருளாதாரம், சட்டம், பொதுத்தமிழ் மற்றும் பொதுஅறிவு தொடர்பான பல முக்கிய நூல்கள் அடங்கியுள்ளன.
என்னென்ன புத்தகங்கள்?
இவற்றில் ‘சிறகுக்குள் வானம்’, ‘தமிழ் நெடுஞ்சாலை’ – பாலகிருஷ்ணன் ஆர், ‘ஐஏஎஸ் படிக்கட்டுகள்’ – வெ. இறையன்பு, மாபெரும் சபைதனில்-உதயச்சந்திரன் ஐஏஎஸ், ‘நானும் இந்திய ஆட்சிப் பணியும்’ – ஞான ராஜசேகரன், ‘இந்திய அரசமைப்பு சட்டம்’ – சங்கர சரவணன், சந்திர சேகரன், ‘பொதுஅறிவு களஞ்சியம்’, ‘பொதுத்தமிழ் களஞ்சியம்’ – சங்கர சரவணன், TNPSC/IAS தேர்வு வழிகாட்டிகள் – ஸ்பெக்ட்ரம், அரிஹந்த், சுரா, சக்தி வெளியீடுகள் ஆகிய புத்தகங்கல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
பொதுமக்கள் பாராட்டு
இந்த நன்கொடையின் மூலம், கிராமப்புற மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் நூலக வளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தனது ஒரு மாத சம்பளத்தை நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கிய விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவாவுக்கு போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் திமுகவினர் பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
