Kallakurichi Inicident: விஷ சாராய மரண செய்தியை பார்த்துவிட்டு சாராயம் குடித்த மக்கள்; பெண் உள்பட ஐவர் அனுமதி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 35க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், வீட்டில் இருப்ப வைத்திருந்த சாராயத்தை குடித்ததாகக் கூறி மேலும் 5 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![Death toll Increasing in Kallakurichi Liquor tragedy New 5 people admitted in hospital including ladies vel Death toll Increasing in Kallakurichi Liquor tragedy New 5 people admitted in hospital including ladies vel](https://static-ai.asianetnews.com/images/01j0sm19qs2v0se6exf1eq0avz/kallakurichi_363x203xt.jpg)
கள்ளகுறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சிலர் கள்ளச்சாராயத்தை குடித்த நிலையில் அவர்களுக்கு நள்ளிரவு முதல் உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி ஒருவர் பின் ஒருவராக 5 பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் அதே சாராயத்தை குடித்ததாக 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நேரம் செல்ல செல்ல உயிரிழப்புகளும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.
இதனிடையே தற்போது 120க்கும் அதிகமானோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுவை ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிர் பலியும் 35ஐ கடந்துள்ளது. மேலும் சிகிச்சை பெறுபவர்களில் 15க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Kallakurichi: கள்ளக்குறிச்சியில் இவ்வளவு பேர் உயிரிழக்க காரணம் என்ன? அமைச்சர் எ.வ.வேலு பகீர் தகவல்.!
வீட்டிலேயே மரணம்
இது ஒருபுறம் இருக்க கள்ளச்சாராயம் குடித்த சிலர் மருத்துவமனைக்கு வருவதற்கு பயந்துகொண்டு வீட்டிலேயே இருப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மருத்துவத்துறையும், காவல் துறையும் இணைந்து சிறப்பு குழுக்களை ஏற்பாடு செய்து கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சாராயம் குடித்தவரின் இறுதிச் சடங்கில் கள்ளச்சாராயம்
இந்நிலையில் கருணாபுரம் கிராமத்தில் சுரேஷ் என்ற நபர் தான் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவரது இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கும் பாக்கெட் சாராயம் விநயோகம் செய்யப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் சுரேஷ் எதன் காரணமாக உயிரிழந்தார் என்ற அறியாமையில் அங்கு விநியோகிக்கப்பட்ட பாக்கெட் சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர். இதனால் கள்ளச்சாராயம் குடித்தவர்கள், இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
பாக்கெட் சாராயத்தை வீணடிக்க மனமில்லை
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட நிலையில், இச்சம்பவத்திற்கு முன்னதாகவே சிலர் பாக்கெட் சாராயத்தை வாங்கி தங்கள் வீடுகளில் இருப்பு வைத்துள்ளனது. அதுபோன்று கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்கள் வீட்டில் பாக்கெட் சாராயத்தை இருப்பு வைத்துள்ளனர். நேற்றைய தினம் கள்ளச்சாராய மரணம் தொடர்பான செய்திகள் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பாவதை பார்த்த நிலையிலும் வாங்கி வைத்திருந்த சாராயத்தை வீணடிக்க மனமில்லாத சிலர் தங்கள் வீட்டில் இருப்பு வைத்திருந்த சாராயத்தை நேற்று இரவு பருகி உள்ளனர்.
அப்படி பருகியதாகக் கூறி பெண் உள்பட 5 பேர் இன்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா, அவரது தம்பி தாமோதரன் ஆகிய மூவரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.