Crime: திருச்சியில் 15 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை? குடியிருப்பு நிறைந்த பகுதியில் கொள்ளையர்கள் துணிகரம்
மணப்பாறை அருகே குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
![Old woman murdered and jewelery stolen in Trichy vel Old woman murdered and jewelery stolen in Trichy vel](https://static-ai.asianetnews.com/images/01j1y1y8krp7wqmgrxt094f05j/mixcollage-04-jul-2024-10-32-am-8230_363x203xt.jpg)
திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன். இவரது மனைவி கல்யாணி (வயது 69). இவரது கணவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் கடைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் அவரது மகன் ராமநாதன் உணவு வாங்குவதற்காக வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் சமயல் அறையில் கல்யாணி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
மேலும் அவர் அணிந்திருந்த வைரத்தோடு உள்ளிட்ட 15 சவரன் நகையும் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் மரியமுத்து, மணப்பாறை இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ள பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்ததுடன் அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்ததால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் கொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் வருண் குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டதுடன், விரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி மோப்ப நாய் நிலா வரவழைக்கப்பட்டு அது சம்பவம் நடந்த இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. இதையடுத்து போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காகத்தான் மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ள நகரின் முக்கிய பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.