புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு வந்த அரசுப் பேருந்தில் கேட்பாரற்று கிடந்த பிறந்து 10 நாட்களேயான ஆண் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநரும், நடத்துனரும் குழந்தையை சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி இரவு 8.30 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. பேருந்து திருச்சி பேருந்து நிலையத்தை அடைந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டனர். மேலும் ஓட்டுநரும், நடத்துநரும் உணவு சாப்பிடுவதற்காக சென்றுவிட்டனர். சாப்பிட்டுவிட்டு மீண்டும் பேருந்தை இயக்க முற்பட்டுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது பேருந்தினுள் இருந்து பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டதும் ஓட்டுநரும், நடத்துநரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம் பேருந்தில் குழந்தை மட்டுமே இருந்தது. பெரியவர்கள் யாரும் இல்லை. குழந்தை தொடர்பாக நடத்துநர் அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளார். ஆனால், யாரும் குழந்தைக்கு உரிமை கொண்டாடவில்லை.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் குழந்தையை மீட்டு புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் குழந்தைக்கு அருகில் குழந்தைக்கு தேவையான உடை, பால் உள்ளிட்ட பொருட்களுடன் பையும் கிடைந்தது. உடனடியாக குழந்தையை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் குழந்தைக்கு பாலூட்டினர். பின்னர் இது தொடர்பாக குழந்தைகள் காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குமரியில் கந்துவட்டி கொடுமையால் பேருந்து உரிமையாளர் தற்கொலை

விரைந்து வந்த குழந்தைகள் காப்பக நிர்வாகிகள் குழந்தையை மீட்டு காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையை பேருந்தில் விட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓய்வு பெற்ற நல்லாசிரியருக்கு ஒன்றிணைந்து விழா நடத்திய கிராம மக்கள்