ஆரணி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருக்கும் விழுகந்தலையைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் முருகன். வயது 37 . இவர் சொந்தமாக கார் வைத்திருக்கிறார். காரை வாடகைக்கு விடுவதுடன் ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று இரண்டு பேர் திருவண்ணாமலை செல்வதற்காக முருகனின் காரை வாடகைக்கு கேட்டுள்ளனர். அவர்களை அழைத்துக்கொண்டு காவேரிப்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆரணியை அடுத்த கீழஅய்யம்பேட்டை என்கிற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது திருவண்ணாமலையில் இருந்து லாரி ஒன்று ஆரணி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக காரும் லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியதில் ஓட்டுநர் முருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த முருகனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.