நெல்லையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்த கணவன், மனைவியை சமாதானப்படுத்தும் முயற்சியில் மாமியாரின் விரலைக் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலை மகன் துரைராஜ் (33). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கலட்சுமிக்கும் திருமணம் நடத்தது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கோபித்துக்கொண்டு தங்கலட்சுமி தனது 3 குழந்தைகளுடன் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கருத்து வேறுபாடு

நேற்று காலை தங்கலட்சுமி தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்காக அங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த துரைராஜ், தனது மனைவியிடம் பேசினார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே தங்கலட்சுமி தனது செல்போன் மூலம் தாய் பேச்சியம்மாளை தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். உடனே பேச்சியம்மாளும் பதறியபடி சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அங்கு துரைராஜ் மற்றும் தங்கலட்சுமி இடையேயான வார்த்தை மோதலை தடுக்க முயன்றார்.

மாமியார் விரலை கடித்து துப்பிய மருமகன்

ஆனால் மாமியாரை கண்டதும் துரைராஜ் கடும் ஆத்திரமடைந்தார். மனைவி பிரிவதற்கு மாமியார் தான் காரணம் என்ற நினைத்த மருமகன் பேச்சியம்மாளின் கையை பிடித்து இழுத்து எதிர்பாராத விதமாக அவரது விரலை கடித்து துப்பியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த பேச்சியம்மாள் அலறி துடித்துள்ளார்.

போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் உடனே பேச்சியம்மாளை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியுடனான பிரச்சினையை தீர்க்க வந்த மாமியாரின் கை விரலை மருமகன் கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.