திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் வினாத்தாளை கசிய விட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Tirunelveli Manonmaniam Sundaranar University question paper leak: திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் கடந்த மே 27ம் தேதி 'இண்டஸ்ட்ரியல் லா' என்ற பாடத்தின் தேர்வு நடக்க இருந்தது. ஆனால் இந்த தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்வு கட்டுப்பாட்டாளர் தேர்வை தற்காலிகமாக ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வினாத்தாள் கசிவு
தேர்வு வினாத்தாள் கசிந்ததால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளில் 'இண்டஸ்ட்ரியல் லா' பாடத்தின் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் அனைத்து தேர்வு மையங்களுக்கும் அனுப்பப்பட்ட வினாத்தாள்கள் திரும்பப் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிய்டையே வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக பதிவாளர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு
மே 26ம் தேதி இரவு 10 மணிக்கு பல்கலைக்கழக தேர்வாணையர் மொபைலுக்கு ஒரு நம்பரில் இருந்து வாட்ஸ் அப் மூலம் தேர்வு வினா தாள் அனுப்பி வைக்கப்பட்டதாவும், வினாத்தாள்களை கசிய விட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசில் கொடுப்பட்ட புகாரில் கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார் புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 316, 318, 3(5), தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வுகள் சட்டம் 3,4 மற்றும் 5 (தேர்வில் முறைகேடு) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
வினாத்தாளை கசிய விட்டது யார்?
முதற்கட்ட விசாரணையில் தேர்வாணையரின் செல்போன் வாட்ஸ் அப்-க்கு வினாத்தாள் அனுப்பியது மதுரையை சேர்ந்த அறிவுச்செல்வன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 106 கல்லூரிகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
