Manjolai: 5 தலைமுறையாக எங்கள் வாழ்விடம்; 15 நாட்கள் தான் கெடு - கண்ணீரோடு முறையிடும் மாஞ்சோலை தொழிலாளர்கள்
திருநெல்வெலி மாவட்டம் மாஞ்சோலையில் கடந்த 5 தலைமுறைகளாக வாழ்ந்து வந்த இடத்தை 15 நாட்களில் காலி செய்யச்சொல்லி ஆலை நிர்வாகம் வற்புறுத்துவதாக அப்பகுதி மக்கள் ஆட்சியரை சந்தித்து முறையிட வந்தனர்.
![Peoples petition against dismissal of tea plantation workers in manjolai by factory management vel Peoples petition against dismissal of tea plantation workers in manjolai by factory management vel](https://static-ai.asianetnews.com/images/01j031w7k5t5qq1ym6zs1ma0p8/mixcollage-11-jun-2024-12-35-pm-5955_363x203xt.jpg)
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்திருக்கும் மலை கிராமங்களான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செயல்பட்டு வரும் தேயிலை நிறுவனத்தின் குத்தகை காலம் வரும் 2028ம் ஆண்டுடன் நிறைவு பெறுகிறது. மேலும் மாஞ்சோலை, காக்காச்சி உள்ளிட்ட மலை கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குத்தகை காலம் முடிவடையும் வேலையில் அப்பகுதியை விட்டு தேயிலை நிறுவனம் வெளியேற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் 2028ம் ஆண்டு வரை கால அவகாசம் இருக்கும் சூழலிலும் தேயிலை தோட்ட நிர்வாகம் வரும் ஜூன் மாத இறுதிக்குள் தேயிலை தோட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களை விருப்ப ஓய்வு வழங்கி காலி செய்ய அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாஞ்சோலை மக்கள் நல சங்கத்தினர் அனைத்து கட்சிகளின் உதவியுடன் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்து மாற்று நடவடிக்கை எடுக்க முறையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் 14ம் தேதிக்குள் விருப்ப ஓய்வு தெரிவிக்கவில்லை என்றால் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என தேயிலைத் தோட்ட நிர்வாகம் மிரட்டி வருவதாகக் கூறி தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மனு அளிக்க வந்தவர்களிடம் குறைகளை கேட்க மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த தோட்ட பணியாளர்கள், நிர்வாகத்திற்கு ஆதரவாக ஆட்சியர் செயல்படுவதாக கூறி கண்ணீருடன் தெரிவித்தனர்.
ஆட்சியர் தங்களது குறைகளை கேட்காமல் தேயிலை தோட்ட நிர்வாகம் விருப்ப ஓய்விற்கு நல்ல தொகை கொடுக்கிறது. அதனைப் பெற்றுக் கொண்டு வெளியேறுங்கள். மக்களை போராட்டத்திற்கு தூண்டாதீர்கள் என ஆட்சியர் பேசுவதாகவும் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். 5 தலைமுறைகளாக மாஞ்சோலை பகுதியில் பணி செய்து வரும் தங்களுக்கு 15 நாட்கள் காலக்கெடு கொடுத்து உடனடியாக வெளியேறுங்கள் என்று சொல்வதால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறோம்.
உங்களின் ஆபாச வீடியோ எங்கள் கையில்; தருமபுரம் ஆதீனத்திற்கு ஆட்டம் காட்டிய உதவியாளர் கைது
மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு உதவி புரிந்து எங்களோடு துணை நிற்கும் என கருதி மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்தால் மாவட்ட ஆட்சியரும் எங்களது மனுவை ரத்து செய்து விடுவதாகவும் விருப்ப ஓய்வு கூட கிடைக்காத நிலைக்கு செய்து விடுவோம் எனவும் தெரிவிப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். சிறு வயது முதல் தெரிந்த தொழிலான தேயிலை பறிப்பதை மட்டுமே செய்து வரும் எங்களுக்கு உடனடியாக உதவ வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.