தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என  பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள் மற்றும் தெருக்கள், சினிமா தியேட்டர்கள் உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் உறுதி செய்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தார். இதனையடுத்து, தமிழக அரசு அதிரடி நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளையும் தொடர்ந்து விரைவுப்படுத்தி வந்தனர். இதனையடுத்து, கொரோனா பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. தமிழக அரசு நடவடிக்கையை பார்த்து மிரண்டு போய் மத்திய அரசே பாராட்டியது. தற்போது வாரம் இரண்டு முறை தடுப்பூசி முகாம்கள் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக பொதுசுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த 19ம் தேதி ஆணை வெளியிடப்பட்டது. அதில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள் மற்றும் தெருக்கள், சினிமா தியேட்டர்கள் உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் உறுதி செய்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது. டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரான் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில், தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், வணிகர் சங்கங்கள், உணவகங்கள், தொழில் நிறுவனங்கள், தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ சங்கங்கள், திரையரங்குகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தொடர்புடைய அனைத்து சங்கங்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர், அரசுத்துறை, தொழிற்சாலை, உணவகங்கள், திரையரங்குகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பொதுமக்களுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம். அதனை அந்தந்த இடங்களில் பணிபுரிபவர்களின் நிறுவனங்கள், உறுதி செய்ய வேண்டும்.‌ கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.