தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார்.

தேனி மாவட்டம் அரண்மனைபுதூரைச் சேர்ந்தவர் சுருளிநாதன்(55). இவரது மனைவி வளர்மதி(49). சுருளிநாதன் திருப்பூரில் இருக்கும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். தீபாவளியை கொண்டாடுவதற்கு விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று காலை தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பெரியகுளம்-வைகை அணை சாலையில் அவர்கள் இருவரும் வந்துள்ளனர். அப்போது பெரியகுளத்திலிருந்து தேவதானப்பட்டி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியுள்ளது. இதில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த சுருளிநாதன் சம்பவ இடத்திலேயே மனைவி கண்முன்னே பலியானார். படுகாயங்களுடன் வளர்மதி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் வளர்மதியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சுருளிநாதனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.