காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து அங்கிருக்கும் அணைகள் வேகமாக நிரப்பின.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கர்நாடகாவில் இருக்கும் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியதை அடுத்து தமிழகத்திற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்த வருடம் இரண்டு முறை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் 16 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் மழையின் அளவு குறைந்ததை தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட நீரின் அளவு அதிகமாக இருந்த காரணத்தால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

தற்போது தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருக்கும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 24 ஆயிரத்து 169 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து பாசனத்திற்காக 22 ஆயிரத்து 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.97 அடியாக இருக்கிறது.