Asianet News TamilAsianet News Tamil

அக்காள்மடம் மீனவர் குடியிருப்புக்கு ஸ்டாலின் விசிட்: மீனவர்கள் வைத்த கோரிக்கை!

அக்காள்மடம் மீனவர் குடியிருப்புக்கு நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலினிடம் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்

TN CM MK Stalin visit to Akkalmad Fishermen Colony and speak with them
Author
First Published Aug 17, 2023, 8:40 PM IST

இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில், இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் வட்டம், பாம்பன் ஊராட்சி, அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள மீனவர் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில், அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மீனவப் பெருமக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, அப்பகுதி மக்கள் குடியிருப்பு பட்டா வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். பட்டா வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து இருக்கிறீர்களா என்று அங்குள்ள பெண்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

‘தக்காளிகளுக்கும் லீவு வேண்டும்’: மெனுவில் தக்காளியை தூக்கிய பர்கர் கிங்!

அத்துடன் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். மேலும், அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதியில் உள்ள மாணவர்களிடம் கலந்துரையாடி, அவர்களது படிப்பு விவரங்கள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

முன்னதாக, ராமநாதபுரம் பேராவூரில், திமுக தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய பாஜக அரசையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசினார். திராவிட இயக்கத்தின் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என தெரிவித்த ஸ்டாலின், தமிழ்நாட்டை திமுகதான் நிரந்தரமாக ஆள வேண்டும் என தலைவர் கலைஞர் கனவு கண்டார். அந்த கனவை நிச்சயம் நிறைவேற்றியே காட்டுவோம் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios