புதுக்கோட்டை அருகே பணிமனையில் பாம்பு கடித்து அரசு பேருந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அருகே பணிமனையில் பாம்பு கடித்து அரசு பேருந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மகன் புண்ணியமூர்த்தி (வயது 32). இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் புதுக்கோட்டை மண்டல கந்தர்வகோட்டை பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை மதுரைக்கு செல்லும் பேருந்தில் நடத்துனராக பணிக்கு செல்வதற்காக பணிமனை வளாகத்தில் உள்ள குளியல் அறைக்கு குளிப்பதற்காக சென்றார். 

குடிநீர் போர்வெல் அருகே செடி, கொடிகள் வளர்ந்து, குப்பைகளும் காணப்பட்டன. இதை கடந்து சென்றபோது புண்ணியமூர்த்தியை பாம்பு கடித்துவிட்டது. உடனே சக ஊழியர்கள், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று புண்ணியமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த தகவல் அறிந்த கந்தர்வகோட்டை பணிமனை ஊழியர்கள் அனைத்து பேருந்துகளையும் பணிமனையில் நிறுத்திவிட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணிமனையை முழுமையாக சுத்தம் செய்து, ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால், கந்தர்வகோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு, கந்தர்வகோட்டை அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து, 22-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.