Asianet News TamilAsianet News Tamil

குமரியில் சொகுசுப் படகு சவாரி ஆரம்பம்! படகு இல்லத்திலிருந்து வட்டக்கோட்டை வரை இயக்கம்!

அமைச்சர் எ.வ. வேலு கன்னியாகுமரியில் உள்ள படகு இல்லத்தில் இருந்து வட்டக்கோட்டைக்கு சொகுசுப் படகு சவாரியைத் தொடங்கி வைத்துள்ளார்.

Tamil Nadu starts Luxury boat service between Kanyakumari and Vattakottai
Author
First Published May 25, 2023, 6:31 PM IST

கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைப் பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் சென்று வருகின்றனர். தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் இந்தப் படகு போக்குவரத்தை சேவையை இயக்கி வருகிறது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.8.25 கோடி செலவில் அதிநவீன சொகுசு படகுகளை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்குக் கொடுத்தது. இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளும் கோவாவில் வடிவமைக்கப்பட்டவை. அவை தாமிரபரணி, திருவள்ளுவர் என்ற பெயர்களுடன் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

கன்னியாகுமரி படகு இல்லத்தில் இருந்து வட்டக்கோட்டை வரை சுற்றுலா பயணிகள் இந்த இரண்டு அதிநவீன சொகுசு படகுகளில் சென்று வரலாம். தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு இந்த படகு சவாரியை புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

குளிர்சாதன வசதி கொண்ட இந்தப் படகில் ஒரு நபருக்கு ரூ.450 கட்டணம் வசூலிக்கப்படும். குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண படகில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படும். முதல் நாளில் 4 முறை இந்த படகுகள் இயக்கப்பட்டன. அதில் 450 சுற்றுலா பயணிகள் சென்றுவந்துள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் எ.வ. வேலு, "பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்  கழகம் கன்னியாகுமரியில் துறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக குளர்சாதன வசதி படகு போக்குவரத்தை மாண்புமிகு பொதுபணித்துறை அமைச்சர் எ.வ வேலு அவர்கள் தொடங்கி வைத்து பயணம் மேற்கொண்டப் போது"  எனக் குறிப்பிட்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios