கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி மேற்கொண்டு வந்த 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்துள்ளார். பிறகு திருவள்ளுவர் சிலைக்குச் சென்றார் பிரதமர் மோடி.

கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி கடந்த 30 ஆம் தேதி மாலை வந்தார். பகவதியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகு, படகு மூலம் கடல் நடுவே உள்ளவிவேகானந்தர் மண்டபம் சென்றார். அங்கு பகவதியம்மனின் ஸ்ரீபாதத்தை தரிசனம் செய்தார். பிறகு பின்னர், விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். 

நள்ளிரவில் தியான மண்டபம் அருகே உள்ள அறையில் சற்று ஓய்வெடுத்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் காவி உடை, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து, வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் துறவிக் கோலத்தில் தியான அறையில் இருந்து பிரதமர் மோடி வெளியே வந்தார்.ருத்ராட்ச மணிகளை உருட்டி, ஜெபம் செய்தபடியே விவேகானந்தர் பாறையை வலம் வந்தார்.

அதன்பிறகு, கிழக்கு நோக்கிகைகூப்பியபடி சூரிய உதய காட்சியைதரிசித்தார். அப்போது மேகங்கள் இல்லாததால் அதிகாலை சூரியன் செந்நிறத்தில் ரம்மியமாக காட்சியளித்தது. பிறகு விவேகானந்தர் சிலைமுன்பு தரையில் அமர்ந்து சுமார் அரைமணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் தியான மண்டபம் சென்று தியானத்தை தொடர்ந்தார். 

Scroll to load tweet…

இன்று தியானத்தின் நிறைவாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த தனிப் படகில் பிரதமர் மோடி சென்றார். அங்கு திருவள்ளுவர் சிலையின் பாதங்களை தொட்டு வணங்கினார் மோடி. இந்நிலையில் அவர் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டார்.

ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..