திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் காவலர்கள் முன்னிலையிலேயே விவசாயி விஷம் அருந்தி உயிரிழந்த நிலையில், அலட்சியமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் குள்ளலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. விவசாயம் செய்து வருகிறார். சிறுமலை அடிவாரப் பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான நிலத்தை பள்ளப்பட்டியைச் சேர்ந்த சிலர் அச்சுறுத்தி பறிக்க முயல்வதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டி, அவரது மகன் சதீஷ் கண்ணன் உள்ளிட்டோர் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இருப்பினும் புகார் குறித்து காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விவசாயி பாண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பாண்டி கடந்த 7ம் தேதி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யாததைக் கண்டித்து தாம் மறைத்து வைத்திருந்த விஷத்தை காவலர்கள் முன்னிலையில் அருந்தினார்.

அவர் விஷம் அருந்திய சில நிமிடங்களில் அரை மயக்கத்தில் சற்று சரிந்த நிலையில் அமர்ந்திருந்தார். ஆனால், காவல் துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் பொருட்டு விவசாயியை தொடர்ந்து தங்கள் செல்போனில் படம் பிடிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தனர். மாறாக அவர் விஷம் அருந்தியதை தடுக்கவோ, அருந்திய பின்னர் அவரை காப்பாற்றும் முயற்சியிலோ ஈடுபடவில்லை.

காவலர்களுக்கு ஒரு படி மேலே சென்ற ஆய்வாளர் சண்முக லட்சுமி, விவசாயி நடிப்பதாகவும், விஷம் குடிப்பதாகக் கூறிவிட்டு முகத்தில் மட்டும் விஷத்தை தெளித்து வைத்திருப்பதாகவும் செல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறார். இவை அனைத்தும் வீடியோவாக தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஷம் அருந்திய விவசாயி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், புகார்தாரர் உயிரிழந்த பின்னர் நடவடிக்கை எடுப்பது தேவையற்றது என காவலர்களுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஓட ஓட வெட்டி கொலை

விவசாயி அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிய ஆய்வாளர் சண்முக லட்சுமி தற்போது ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி; இனி குடிநீர் கேன் எடுத்துவர தடை