கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் பரிதாபமாக பலியாயினர். இந்த சோக சம்பவம் தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் இடைவிடாமல் மழை கொட்டித் தீர்க்கிறது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக மழை விடாமல் கொட்டுகிறது.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

அந்த கிராமத்தை சேர்ந்தவர் யசோதை (69). அவரது மகள் ஜெயா (40). இவர்கள் இருவரும் நேற்று இரவு தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஓயாத மழை காரணமாக வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி யசோதை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயா படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

தாய், மகள் பலியான பரிதாபம்

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ஜெயாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் உயிரிழந்தது முள்ளி பள்ளம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. கணவர் இறந்ததால் ஜெயா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு 2 ஆண், ஒரு பெண் என 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்க்கது.

கண் கலங்கிய அமைச்சர்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உடனடியாக அங்கு விரைந்து சென்று கண் கலங்கியபடி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவியும் செய்தார். வீட்டின் சுவர் இடிந்து பலியான தாய், மகளின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அன்புமணி, ''கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அந்த வீட்டில் வசித்து வந்த யசோதை, ஜெயா ஆகிய இருவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.