பள்ளிகளில் மத அடையாளங்களை கட்டாயப்படுத்துவது தவறானது என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பேசுவது பிற்போக்குத்தனம் என்று அவர் கூறியுள்ளார்.
Anbil Mahesh Says It Is Wrong To Mandate Religious Symbols In Schools: கோவை மாவட்ட கல்வித் துறை சார்பில் "கற்றல் அடைவு" குறித்த ஆய்வு கூட்டம் புரூக்பீல்ட்ஸ் சாலையில் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் கோவை மாவட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார்.
கோவையில் ஆய்வு கூட்டம்
இந்த கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ், ''கோவை மாவட்டத்தில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளில் நல்ல தேர்ச்சியை பள்ளிகள் பெற்றுள்ளன. ஆனால் 11 ம் வகுப்பில், குறைந்து உள்ளது. 3, 5, 8 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடந்த தேர்தலில் 3 ம் வகுப்பில் தேர்ச்சி குறைந்து உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதை சரி செய்து மேம்படுத்துவது குறித்து உடனே நடவடிக்கை எடுத்து இருப்பீர்கள்'' என்றார்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் தரம்வாய்ந்தவர்கள்
மேலும், ''மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளரை காட்டிலும் ஆசிரியர்கள் நீங்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். நம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிகரான ஆசிரியர்கள் உலகில் வேறு யாரும் கிடையாது. பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு Review மீட்டிங்கை முடித்துள்ளோம். ஆய்வு அறிக்கையை ஆசிரியர்கள் உங்கள் கையில் கொடுத்துள்ளோம். இனி நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ரிப்போர்ட் கார்டு
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், ''பள்ளியில் என்னென்ன செய்யப் போகிறோம், என்னென்ன பாடப்பிரிவுகளில் பின் தங்கியுள்ளோம். அதனை எவ்வாறு சரி செய்யப்போகிறோம் என்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தனியாக ரிப்போர்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் சூலூர் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதி பள்ளிகள் சற்று பின்தங்கி உள்ளது. ஹைடெக் லேப் டெண்டர் பணிகளை பைனான்ஸ் பிரிவு பார்த்துக் கொள்கிறது.
மத்திய அரசு பணம் தரவில்லை
எஸ்எஸ்ஏ யை பொறுத்தவரை பணம் வரவில்லை. தமிழக அரசு முதல் தவணை ஆகிய 700 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. ஆர்டிஆக்ட் தனியார் பள்ளிகளில் நம் பிள்ளைகளை சேர்க்கின்ற ஒரு ஆக்ட் அது, மத்திய அரசு அதற்கான 600கோடி ரூபாய் பணத்தை தரவில்லை. நாம் தந்திருக்க கூடிய பணத்தையும் அவர்கள் தரவில்லை'' என்றார்.
அண்ணாமலை கூறுவது பிற்போக்குத்தனம்
தொடர்ந்து பள்ளிகளில் ருத்ராட்சம் அணிந்து செல்லுங்கள் என அண்ணாமலை பேசியது குறித்து கருத்து தெரிவித்த அன்பில் மகேஷ், ''ஒவ்வொருவருக்கும் மதம் சார்ந்த நம்பிக்கை உள்ளது. அதில் யாருடைய தலையிடும் இருக்க கூடாது. பள்ளிக்கூடம் என்பது பொதுவான ஒரு இடம் அங்கு அறிவு சார்ந்த விஷயங்களை சொல்லித் தாருங்கள் என்று அறிவுரை கூற வேண்டும். அதை விட்டு இதுபோன்று கூறுவதை தான் பிற்போக்குத்தனம் என்று நான் குறிப்பிடுகிறேன்.
நீட் தேர்வில் இதை சொல்ல வேண்டியது தானே
மத நம்பிக்கைகளில் யாரும் தலையிடக்கூடாது. ஆனால் பள்ளிகளில் அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும். மதம் சார்ந்து அவ்வாறு செய்கிறோம் என்று அவர்கள் கூறினால் நீட் தேர்வு எழுதும்போது தாலியை கூட கழட்டி வைத்துவிட்டு எழுதுங்கள் என்று கூறுகிறார்களே. அப்போது அவர் பேசுவாரா? அங்கொன்றும் இங்கொன்றும் பேசக்கூடாது'' என்றார்.
