தமிழக அரசே.. தயவுசெய்து கோவில்களை இந்துக்களிடமே ஒப்படைச்சுருங்க; நாங்க பார்த்துக்குறோம்.!. சத்குரு வேண்டுகோள்
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து கோவில்களின் நிர்வாகத்தை இந்துக்களிடமே ஒப்படைக்குமாறு தமிழக அரசுக்கு சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல இந்து கோவில்கள் பராமரிக்கப்படாமல் இருக்கும் அவலத்தை சுட்டிக்காட்டி, இந்து கோவில்களின் நிர்வாகத்தை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறார் சத்குரு.
அந்தவகையில், அதே வலியுறுத்தலை புள்ளிவிவரத்துடன் மீண்டும் முன்வைத்துள்ளார் சத்குரு. இதுகுறித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள சத்குரு, "1700ம் ஆண்டுகளில் இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, இந்து கோவில்களின் நிர்வாகத்தை தன்வசப்படுத்தின. கோவில்களின் மீதான பக்தியாலோ, பற்றாலோ அல்ல; கோவில்களின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்கள், நிலங்கள், தங்கம், வைரம் ஆகியவற்றிற்காக கோவில் நிர்வாகத்தை தன்வசப்படுத்தின.
ஆனால் அதே நிலை இன்றும் தொடர்வது அபத்தம். இந்து கோவில்களின் நிர்வாகம் இந்துக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். கோவில்கள் பிரார்த்தனை செய்வதற்கான இடமல்ல; கோவில்கள் அமைதிக்கான இடம். மதச்சார்பற்ற ஒரு நாட்டில் குறிப்பிட்ட மதம் சார்ந்த வழிபாட்டுத்தலங்களை அந்த மதத்திடமே ஒப்படைக்க வேண்டும்.
’தமிழ்நாட்டில் அரசு நிர்வாகம் செய்யும் கோவில்களில், 11,000 கோவில்கள் ஒரு நாளில் ஒருமுறை கூட பூஜை செய்ய முடியாமல் நலிவடைந்து கொண்டிருக்கின்றன. ஓராண்டுக்கு ரூ.10,000 கூட வருவாய் ஈட்டமுடியாமல் 34,000 கோவில்கள் உள்ளன. 37,000 கோவில்களில் பூஜை முதல் சுத்தம் செய்யும் வரை அனைத்து பணிகளையுமே ஒரேயொருவர் மட்டுமே செய்யும் நிலை உள்ளது. வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறையால் கோவில்களை முறையாக பராமரிக்க முடியவில்லை’ என்ற தகவலை தமிழக அரசே சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
எனவே தயவுசெய்து இந்து கோவில்களை இந்து பக்தர்களிடமே ஒப்படைத்துவிடுங்கள்; நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நிதி பிரச்னையை நாங்கள் சமாளித்து நாங்கள் நிர்வாகம் செய்துகொள்கிறோம்" என்று சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்து கோவில் நிர்வாகத்தை மீட்டெடுக்கும் வகையில் #FreeTNTemples என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் சத்குரு.