கோவையில் ஆறு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் பலர் பார்த்து செல்கின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கிறது பெரியநாயக்கன்பாளையம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவர் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக ஆடுகள் வளர்த்து வருகிறார். ராமசாமியின் பண்ணையில் தற்போது 120 ஆடுகள் இருக்கின்றன. இந்த நிலையில் ஆடு ஒன்று சினையாக இருந்திருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று அந்த ஆடு, குட்டியை ஈன்றுள்ளது. குட்டி ஆட்டை பார்த்த ராமசாமி அதிர்ச்சி அடைந்தார். புதிதாக பிறந்த அந்த ஆட்டிற்கு ஆறு கால்கள் இருந்துள்ளது. வழக்கமான முறையில் நான்கு கால்களும், ஆட்டின் வயிற்று பகுதியில் இரண்டு கால்களும் இருந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவரை அழைத்து வந்து ராமசாமி பரிசோதித்து பார்த்தார். ஆடு நலமாக இருப்பதாக தெரிவித்த மருத்துவர், 6 கால்கள் இருப்பதால் நடப்பதற்கு சற்று சிரமப்படும் என்றார். மற்றபடி அதற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து ராமசாமி கூறும்போது 35 வருடங்களாக ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் ஆறு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை இப்போது தான் பார்ப்பதாக கூறினார். ஆட்டுக்குட்டி உடல்நலத்துடன் இருப்பது மகிச்சியளிப்பதாக கூறிய அவர் அதை சிறந்த முறையில் பராமரிக்க இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் ஆறு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி பற்றிய செய்தி அந்த பகுதியில் பரவ பலர் வந்து அதை பார்த்த வண்ணம் உள்ளனர்.