கோவை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையத்தை சேர்த்ந்தவர் சரவணன். இவரது மகன் தர்னிஷ்(8). அந்த பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் படித்து வந்தான். சிறுவன் தர்னிஷ்க்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். மருத்துவர்களின் பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனால் மேல்சிகிச்சைக்காக உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டுள்ளான்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சிறுவன் தர்னிஷ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை பரிதாபமாக உயிரிழந்தான். அதே போல, திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருடைய 5 வயது மகள் ஜெசிந்தா கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தீராத காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதனால் சிறுமியை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சிறுமி, நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தாள். கோவை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் அடுத்தடுத்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.