பிரச்சாரத்தின் போது வேற்று கிரகத்தில் இருந்தீர்களா?... தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி...!
பிரச்சாரம் நடந்த போதெல்லாம் வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? என காட்டமான கேள்விகளையும் தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியது.
தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளன.இந்நிலையில், 77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடக் கோரி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாகவும், இரண்டு அறைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாகவும், கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கும் போது, தனி மனித விலகல் பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த வேண்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும், மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும், கிருமிநாசினி வைக்க வேண்டும், முக கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது எனக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 4900 சதுர அடி மற்றும் 3 ஆயிரத்து 400 சதுர அடிகளில் இரண்டு அறைகள் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை க்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் தவிர மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் ஏஜெண்டுகளை அனுப்பப் போவதில்லை என்றும் 9 அரசியல் கட்சிகளில் ஏழு அரசியல் கட்சிகள் தங்கள் ஏஜண்ட்களை அனுப்பும் என்றும் தெரிவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். மேலும் வாக்கு எண்ணிக்கை காக ஆறு கூடுதல் மேஜைகள் போடப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, தேர்தல் பிரச்சாரத்தின் போது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் தான், தற்போதைய நிலைக்கு காரணம் எனவும், ஏன் எனவும், தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டும் அதை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்ததாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
மேலும் பிரச்சாரம் நடந்த போதெல்லாம் வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? என காட்டமான கேள்விகளையும் தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்படி உத்தரவிட நேரிடும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமிநாசினி தெளித்தல், தனி மனித விலகலை பின்பற்றுதல், முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பொது சுகாதார இயக்குனருடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்றையதினம் இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.