இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற 3 பேர் உட்பட 4 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து எடுத்துச் சென்றனர். வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை பைக்கில் தூக்கிச் சென்ற நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்றியதாகப் புகார் எழுந்த நேரத்தில், இச்சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட நபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது. 

வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு விவிபேட் இயந்திரம் ஸ்கூட்டரில் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையமும் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற 3 பேர் உட்பட 4 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சம்பவம் குறித்த விசாரணைக்கு ஏப்ரல் 12ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.