தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா தொற்று... இன்று ஒரே நாளில் 6,495 பேருக்கு பாதிப்பு...!
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் அதிகபட்ச பாதிப்பை சந்தித்து வருகிறது. இன்று கோவையில் 498 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 80 ஆயிரத்து 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,495 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 085 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 94 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,231 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 6,406 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 52,721 ஆக உள்ளது. இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 133 ஆகும். இறப்பு விகிதத்தை பொறுத்தவரை இன்று சென்னையில் 16 பேர், சேலத்தில் 9 பேர், செங்கல்பட்டில் 8 பேர், கடலூர், கோவை, காஞ்சியில் தலா 5 பேர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருச்சி மாவட்டங்களில் தலா 4 பேர் வீதம் உயிரிழந்துள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் அதிகபட்ச பாதிப்பை சந்தித்து வருகிறது. இன்று கோவையில் 498 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து செங்கல்பட்டில் 419, கடலூரில் 983, சேலத்தில் 329, திருவள்ளூரில் 293, கள்ளக்குறிச்சி 228 பேர் என கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.