தமிழகத்தில் ஜூன் 14 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு... எவற்றுக்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா?
7-6-2021 முதல் 14-6-2021 காலை 6-00 மணி வரை, சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தளர்வுகற்ற ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தொற்றின் தாக்கம் குறைய ஆரம்பித்தது. எனவே ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு ஆலோசனை வழங்கி இருந்தது. அதனைத் தொடர்ந்து சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
எனவே 7-6-2021 முதல் 14-6-2021 காலை 6-00 மணி வரை, சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கடந்த முறை தடை விதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகள் இந்த முறையும் தொடர்கின்றன. குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக், சலூன்கள், தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை என்பது தெளிவாகியுள்ளது. அதேபோல் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி கிடையாது. பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.
இருப்பினும் வாடகை வாகனங்கள், டேக்ஸிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.