15 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்கும் விதமாக இந்தியா முழுவதும் மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி திருவிழாவை நடத்தியுள்ளது. ஏப்ரல் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்ற தடுப்பூசி திருவிழாவிற்காக நாடு முழுவதும் முதல் நாளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் செயல்பட்டன. அதன் பின்னர் படிப்படியாக அதிகரித்து 70 ஆயிரம் வரையிலான தடுப்பூசி மையங்கள் செயல்படுத்தப்பட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல் நாளான ஏப்ரல் 11ம் தேதி 29,33,418 தடுப்பூசிகள் போடப்பட்டன. மறுநாள் 40,04,521 தடுப்பூசிகளும், ஏப்ரல் 13ம் மற்றும் 14ம் தேதிகளில் முறையே 26,46,528 மற்றும் 33,13,848 தடுப்பூசிகளும் போடப்பட்டன. இதுவரை மொத்தம் ஒரு கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 39 லட்சத்து 44 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

இந்நிலையில் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க கோரி மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. 15 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன் களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்தக்கட்டமாக 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்று கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே கூடுதல் தடுப்பூசிகள் கோரப்பட்டுள்ளதாகவும், ஒரிரு நாட்களில் மத்திய அரசு, தமிழக அரசுக்கு தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.