ஆக்சிஜன் பற்றாக்குறை பேச்சுக்கே இடமில்லை.. உயர்நீதிமன்றத்தில் புள்ளி விவரத்துடன் தெரிவித்த தமிழக அரசு..!
தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறை இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறை இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை, தமிழக அரசின் ஒப்புதல் இன்றி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது. ரெம்டெசிவர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவது எழுந்த புகார் தொடர்பாகவும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதா என கேள்வி எழுப்பியது. மேலும் சிகிச்சைக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளதா என தமிழக அரசிடம் கேட்டு பிற்பகலில் சொல்லும்படி தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் கூறப்பட்டது.
அதன்படி இவ்வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் தமிழகத்தில், ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவிர் தடுப்பு மருந்துகளுக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. தெலுங்கானா, ஆந்திராவிற்கு ஆக்சிஜனை அனுப்பி வைத்ததால், தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை. தற்போது, 1,167 டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை. தனியார் மருத்துவமனைகளில் 3 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.