10 நிமிஷத்துல போய் பார்க்கும் போது என்னுடைய குழந்தைக்கு உயிரே இல்ல.. உடம்பு முழுவதும் ரத்தம்.. தாயின் கதறல்
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தனது ஒரே மகனை பறிகொடுத்துள்ளேன். பள்ளி நிர்வாகிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம். காலை 8: 30க்கு மணிக்கு பள்ளிக்குக் குழந்தையை அனுப்பினேன்.
சென்னையில் பள்ளி பேருந்து மோதி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவனின் பெற்றோருக்கு உறுதியளித்துள்ளார்.
பள்ளியில் விபத்து
சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர். இவரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களின் மகன் தீக்சித்(7) என்பவர் வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை பள்ளி வளாகத்தில் பள்ளி வேன் மோதியதில் தீக்சித் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ், அம்பத்தூர் வருவாய்த் துறை அதிகாரி இளங்கோ, காவல் துணை ஆணையர் மீனா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆறுதல் கூறிய அமைச்சர்
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி வேன் ஓட்டுநர், பள்ளி தாளாளர் ஜெய சுபாஷ், முதல்வர் தனலட்சுமி மற்றும் வேனில் இருந்து குழந்தைகளை இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ஓட்டுநர் பூங்காவனம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பள்ளி ஊழியர் ஞானசக்தி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, குழந்தையை இழந்து தவிக்கும் அவருக்கு ஆறுதல் கூறிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். பள்ளியின் தாளாளரைக் கைது செய்யும் வரை, உயிரிழந்த மாணவர் தீக்சித் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் பெற்றோரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னரே, மாணவர் தீக்சித் உடலைப் பெற்றோர் வாங்கச் சம்மதம் தெரிவித்தனர்.
கதறும் தாய்
இதுகுறித்து மாணவனின் தாயார் ஜெனிபர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தனது ஒரே மகனை பறிகொடுத்துள்ளேன். பள்ளி நிர்வாகிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம். காலை 8: 30க்கு மணிக்கு பள்ளிக்குக் குழந்தையை அனுப்பினேன். அடுத்த 10வது நிமிடத்தில் பள்ளியிலிருந்து மகனுக்கு விபத்து ஏற்பட்டதாக போன் செய்து கூறினார்கள். அங்கு போய் பார்க்கும் போது வாய், மூக்கு, உடல் முழுக்க ரத்தமாக இருந்தது. அவனுக்கு ஏழு வயது தான் ஆகிறது. என்ன நடந்தது என்று பள்ளி தரப்பில் இதுவரை ஒருவர் கூடச் சொல்லவில்லை. வேனில் உணவு கூடையை விட்டு சென்றதாகவும், அதை எடுக்க செல்லும்போது தவறி விழுந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் என் குழந்தையின் வயிற்றில் பள்ளி வாகனம் ஏறி இறங்கி உள்ளது. அதனால், பள்ளி நிர்வாகிகளை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று தெரிவித்தார்.