தமிழகத்தில் பேருந்தை தொடர்ந்து ரயில் சேவைக்கும் ஆப்பு... ஜூலை 31ம் தேதி வரை ரத்து..!
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,324ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,099ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்று தமிழக அரசு தெற்கு ரயில்வேயிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று ஜூலை 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், திருச்சி- செங்கல்பட்டு, மதுரை- விழுப்புரம், கோவை- காட்பாடி ரயில்கள் ஜூலை 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.