தமிழகத்தில் அமலாகும் புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தம்.. காவல்துறையின் கெடுபிடிகள் ஆரம்பம்!!
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தம், அரசாணை பிறப்பிக்கப்பட்டு விரைவில் தமிழகத்தில் அமல்படுத்தப்படவுள்ளது.
நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகையை பலமடங்கு உயர்த்தியது மத்திய அரசு. கடந்த 1 ம் தேதி முதல் இது அமல்படுத்தப்பட்டது.
அதன்படி மது அருந்தி வாகனம் ஓட்டுதல், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் இல்லாமல் செல்லுதல், உரிய வயதுக்கு வராமல் வாகனம் ஓட்டுதல், வாகனங்களின் அதிக வேகம், அபாயகரமாக வாகனத்தை செலுத்துதல், ரேசில் ஓட்டுவதுபோல் செல்லுதல் போன்ற பல குற்றங்களுக்கு அபராத தொகையை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு.
இந்த நிலையில் தமிழகத்தில் இந்த நடைமுறை இன்னும் அமலுக்கு வரவில்லை. ஆனால் அதற்கு முன்பே காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது. பல இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
வாகன ஓட்டிகளும் தற்போது போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். மற்ற மாநிலங்களில் பல ஆயிரக்கணக்கில் அபராத தொகை விதிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை பார்த்து உஷாராகி உள்ளனர். ஆனால் தமிழகத்தில் இந்த புதிய சட்டத்திற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் முன்னரே சில இடங்களில் ஆயிரக்கணக்கில் அபராத தொகை விதிக்கப்பட்டதாக தகவல் வந்தன.
சாலை விபத்துகளை குறைப்பதற்காகவே இவ்வாறு கடுமையான விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில மாநில அரசுகள் இந்த அபராத தொகைகள் மிக அதிகமாக இருப்பதால் பொதுமக்களை பாதிக்கும் என்று எதிர்ப்பு தெரித்துள்ளனர். பல மாநிலங்களில் இது நடைமுறைக்கு வந்த போதும் கேரளா, மேற்கு வங்கம் போன்ற ஒரு சில மாநிலங்களில் எதிர்ப்பு நிலவி வருகிறது. பாஜக அரசு நடைபெறும் குஜராத் மாநிலத்தில் அபராத தொகை குறைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் அபராத தொகை குறைத்து அரசாணை வெளியிடப்படுமா அல்லது மத்திய அரசின் அதே நடைமுறையை பின்பற்றுமா என்பது விரைவில் தெரிய வரும்.