#BREAKING ‘6 மாதம் சிறை, ரூ. 10, ஆயிரம் அபராதம்’... தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!
பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என்பதால் இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை மறுநாள் முதல் மே 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாளை வழக்கமான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என்பதால் இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனிடையே தனியார் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் அதிரடி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் கொரோணா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காகவும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவும். 10.05.2021 காலை 04.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கினை அமல்படுத்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், தனியார் துறை தொழில் நிறுவனங்களும் மற்றும் வணிக நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக 08.05.2021 (சனிக்கிழமை) மற்றும் 09.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் அனைத்து கடைகளும், தொழில் நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் வழக்கம் போல காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட இரு தினங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக அனைத்து போக்குவரத்துக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. வகையான இந்த சூழ்நிலையினை பயன்படுத்தி தனியார் பேருந்துகள். ஆம்னி பேருந்துகள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு வசூலிப்பது கண்டறியப்பட்டால் கீழ்கண்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் போக்குவரத் துறையால் எடுக்கப்படும்.
மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 192-A -ன்படி அனுமதி சீட்டின்நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காக ரூ.10,000/- வரை அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். மோட்டார். வாகன சட்டம் 1988 பிரிவு 207-ன்கீழ் வாகனம் சிறை *பிடிக்கப்பட்டு, தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 421-ன்கீழ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு, வழக்கு தொடரப்படும்.
எனவே, தனியார் பேருந்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இந்த பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்காக சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு, முறையான கட்டணம். மட்டும் வசூலித்து வாகனங்களை இயக்குமாறு உத்தரவிடப்படுகிறது. மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.