கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தமிழக போலீஸாருக்கு வீடியோ மூலம் மெசேஜ் சொல்லியுள்ளார் டிஜிபி திரிபாதி. 

இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டுவருகிறது என்றே சொல்ல வேண்டும். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் 840 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். ஆனால் 1683 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்தளவிற்கு தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் சிகிச்சை நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டில் ஊரடங்கை சரியாக கடைபிடிப்பதை தமிழ்நாடு போலீஸார் உறுதி செய்துவருகின்றனர்.

கொரோனா சிகிச்சை பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தடுப்பு பணிகளில் ஒன்றான ஊரடங்கை மக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்வதன் மூலம் மேலும் பரவாமல் தடுக்கும் பணியை போலீஸார் சிறப்பாக செய்துவருகின்றனர்.

கொரோனாவுக்கு எதிரான போரில், நெருக்கடியான சூழலில், தன்னலம் பாராமல் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆகியோர் களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர். 

இந்நிலையில், களத்தில் இறங்கி பணியாற்றும் தமிழக காவல்துறையினருக்கு காவல்துறையின் தலைவர் டிஜிபி திரிபாதி, வீடியோ மூலம், அவர்கள் மீதான அன்பினாலும் பாசத்தாலும் அக்கறையாலும் ஒரு மெசேஜ் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் பேசியுள்ள டிஜிபி திரிபாதி, இதற்கு முன் ஏராளமான நெருக்கடிகளை சந்தித்து அவற்றிற்கெதிராக வெற்றி கண்ட தமிழக காவல்துறை, கொரோனாவுக்கு எதிரான போரிலும் வெற்றி பெறும். மக்களுக்காக களத்தில் இறங்கி பணிபுரியும் போலீஸார், உங்கள் உடம்பையும் உங்கள் குடும்பத்தினரின் உடம்பையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பத்திரமாக பார்த்துக்கொண்டால் தான் மக்களுக்காக சேவையாற்ற முடியும். எனவே உங்கள் நலனிலும் அக்கறை செலுத்துங்கள் என்று தமிழக காவல்துறையினர் மீதான அக்கறையில் வீடியோ மூலம் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்,