கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்., 26 முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்..! எவற்றிற்கெல்லாம் தடை? முழு விவரம்
கொரோனா 2ம் அலையை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. எவற்றிற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரத்தை பார்ப்போம்.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. இந்தியாவில் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகிவருகிறது. தமிழ்நாட்டிலும் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. அதன்படி, வரும் 26ம் தேதி முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
வரும் 26ம் தேதி(திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்:
* தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி இல்லை.
* ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதியில்லை. ஷாப்பிங் மால்களில் இருக்கும் கடைகளும் இயங்க அனுமதியில்லை.
* ஹோட்டல்கள், டீக்கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்; அமர்ந்து உண்ண அனுமதி கிடையாது.
* மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் ஆகியவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
* திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், இறுதி ஊர்வலங்களில் 25 பேரும் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.
* புதுச்சேரி தவிர மற்ற வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்.
* கிளப் மற்றும் விளையாட்டு பயிற்சி மையங்களுக்கு அனுமதியில்லை.
* ஐடி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம். மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்.
* வணிக வளாகங்களில் இயங்கும் மளிகை கடைகள், காய்கறி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபாடு செய்ய தடை விதிக்கப்படுகிறது.