புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
தமிழக காவல் துறை சட்டம் - ஒழுங்கு புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி திரிபாதி நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்தப் பதவியைத் தமிழக அரசே நேரடியாகத் தேர்வு செய்தாலும் அதற்கான பட்டியலை மத்திய அரசு தேர்வாணையத்துக்கு சமர்ப்பித்து, அந்த அமைப்பு அளிக்கும் பட்டியலிலிருந்தே ஒருவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இப்பதவியைப் பிடிக்கும் போட்டியில் சைலேந்திர பாபு, சஞ்சய் அரோரா, கரன் சின்ஹா, சுனில் குமார் சிங், கந்தசாமி, ஷகில் அக்தர், பிரஜ் கிஷோர் ரவி ஆகிய 7 பேர் இருந்தனர். .இறுதிப் பட்டியலில் சைலேந்திர பாபு, கரன் சின்ஹா ஆகிய இருவர் மட்டும் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சைலேந்திர பாபுவை புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டது. புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு 1987ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்த அவர், காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி நீண்ட அனுபவம் உள்ளவர்.