ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.. பணிச்சுமை காரணமாக மாடியில் இருந்து குதித்து இளம் மருத்துவர் தற்கொலை?
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த எலும்பியல் மருத்துவர் கண்ணன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த எலும்பியல் மருத்துவர் கண்ணன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த முதலாம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை முதுநிலை மருத்துவ மாணவர் கண்ணன் இன்று அதிகாலை 5 மணியளவில் ஸ்டான்லி மருத்துவமனைக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வரையிலும் கொரோனா வார்டு பணியைக் கண்ணன் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.