ஏழாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்.. தடுப்பூசி செலுத்தாமல் டிமிக்கி கொடுப்பவர்களுக்காக புதிய முடிவு..!
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கும் மக்களுக்கு, அதைச் செலுத்திக்கொள்ளும் வகையில் நினைவூட்டும் விதமாக ஸ்லிப்கள் வழங்கப்பட உள்ளது.
சென்னையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 55.58 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 47.37 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, 85.2 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். அதேபோல 23.67 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். அதாவது 46 சதவீதம். இரண்டாவது டோஸ் உரிய நேரத்தில் செலுத்தாமல் 4 லட்சம் பேர் சென்னையில் இருக்கிறார்கள். தற்போதைய நிலையில் இதுவரை முதல் டோஸ் செலுத்தாத 15 சதவீதம் பேருக்கும், இரண்டாவது டோஸை உரிய நேரத்தில் செலுத்திக்கொள்ளாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
அதற்கு வசதியாக, இவர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி முகாம் எங்கு நடைபெறுகிறது, எப்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்ற தகவல்கள் அடங்கிய ஸ்லிப்பை வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தவிர செல்போனில் குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட உள்ளன. சென்னையில் ஏழாவது கட்டமாக வரும் சனிக்கிழமை 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை வரவழைக்க இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.