இயேசு அழைக்கிறார் அதில் பிழைக்கிறார்.. வெளிநாட்டில் ரூ.120 கோடி முதலீடு.. வசமாக சிக்கிய பால் தினகரன்..!
மத போதகர் பால் தினகரன் ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வருமான வரித்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மத போதகர் பால் தினகரன் ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வருமான வரித்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் பால் தினகரன் கிறிஸ்துவ மத பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். இவருக்கு, வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். வரி ஏய்ப்பு இயேசு அழைக்கிறார் என்ற குழுமத்திற்கு வந்த நிதிக்கு, முறையாக வரி செலுத்தவில்லை என, வருமான வரித் துறைக்கு புகார் வந்தது. மேலும், கல்வி நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் ஜெபக் கூட்டங்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரக் கூடிய நன்கொடைகளை குறைத்து காட்டி, வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார்கள் வந்தன.
இதனையடுத்து, சென்னை, கோவை உட்பட, பால் தினகரனுக்கு சொந்தமான, 25 இடங்களில், கடந்த 3 நாட்களாக வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று இரவு முடிவடைந்தது. பிற இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை காருண்யா பல்கலைக்கழகத்தில் மொத்தமாக கொண்டுவரப்பட்டு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் காருண்யா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 3 நாள் சோதனையில் ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில், பால் தினகரன் அடுத்த வாரம் சென்னையில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.