திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா இன்று காலை திருச்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்தபோது ஜீப் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. விபத்தில் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
Trichy Car Accident: திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியராக ( உதவி கலெக்டர்) பணியாற்றி வருபவர் ஆரமுத தேவசேனா (54). இவர் இன்று காலை அலுவலக பணிக்காக அரசு ஜீப்பில் திருச்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். காரை திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த பிரபாகரன் ஓட்டினார். அப்போது ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி பகுதியில் கார் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காரின் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதல்
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. அப்போது திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியது மட்டுமல்லாமல் சாலையோரம் சாலை பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி. எந்திரம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பக்கம் அப்பளம் நொறுங்கியது. இவ்விபத்தில் இடதுபுறம் அமர்ந்திருந்த ஆரமுத தேவசேனா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். ஓட்டுநர் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கார் ஓட்டுநர் படுகாயம்
இந்த விபத்து குறித்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த கலெக்டர் ஆராமுத தேவசேனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த கார் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்
தகவல் அறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவன் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியான வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் உதவி கலெக்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
