பொதுமக்களுக்கு முக்கிய தகவல்... மருத்துவர் அறிவுரையின்றி ரெம்டெசிவிர் போடக்கூடாது..!
கொரோனா பாதிக்கப்பட்ட சில நபர்கள் வீட்டிலேயே ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி போடுகின்றனர். அது தவறானது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்ட சில நபர்கள் வீட்டிலேயே ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி போடுகின்றனர். அது தவறானது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராதாகிருஷ்ணன்;- கொரோனா தொற்று பாதித்த பொதுமக்கள், மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை என்று பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் 95,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு, கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
மேலும், சிலர் வீட்டிலேயே ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிப் போட்டுக் கொள்கிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே ரெம்டெசிவிர் மருந்து வாங்கி போட்டுக்கொள்ளக்கூடாது. கொரோனா தடுப்புக்கு கூடுதல் மருத்துவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை. ஆயிரகணக்கான படுக்கைகள் காலியாக உள்ளன. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றினால் கொரோனா பரவலை குறைக்கலாம்.
சென்னை அண்ணாநகர் புறநகர் மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் அமைக்கப்பட உள்ளது. ஒரு நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கலனை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் 2,400 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.