உருவாகிறது புதிய காற்றழுத்தம்..! தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..!
வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சிக்கான அறிகுறிகள் தென்படுவதால் அடுத்த வரும் சில தினங்களுக்கு தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கியது. பின் வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட புயல்களால் தமிழகத்தில் மழையின் அளவு வெகுவாக குறைந்தது.
இதனிடையே வெப்பசலனத்தால் தமிழகத்தில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவும், இன்று அதிகாலையிலும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் இன்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூறிய சென்னை வானிலை மைய அதிகாரி புவியரசன், வரும் 18 ம் தேதி வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் 18 ,19 ம் தேதிகளில் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்றார். மேலும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் தற்போது மழை பெய்துவருவதாகவும், இது மேலும் இரு தினங்களுக்கு நீடிக்கும் என்றார்.
இதையும் படிங்க: ஒரு நாள் தலைமை ஆசிரியை..! அதிரடியாக செயல்பட்டு அசத்திய அரசு பள்ளி மாணவி..!