பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை... அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு...!
பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. எனவே மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் உருவானது. இதையடுத்து முதலில் பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து முடிவெடுத்த தமிழக அரசு, நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என அறிவித்தது. வழக்கமாக 10ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே முதலாமாண்டு பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், கொரோனாவால் 2020-21 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 51அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கான 18 ஆயிரத்து 120 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலையில் தொடங்க உள்ளது. அதற்கான விண்ணப்பப் பதிவு இணைய வழியில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு, நேரடி 2-ம் ஆண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் https://tngptc.in/ என்ற இணையதளம் வழியாக ஜூலை 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “இதுவரையில், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு பட்டயப்படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி என்றிருந்த போதிலும், 2020-21-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு இறுதி தேர்வு நடத்துவது Covid -19 காரணமாக கைவிடப்பட்டதை தொடர்ந்து, 9-ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டயப் படிப்பு மாணாக்கர் சேர்க்கை செய்து கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.