ஊரடங்கு நீட்டிப்பு கிடையாது.. சுவை, மணம் இல்லாவிட்டால் கொரோனா அறிகுறி.. மருத்துவர்கள் குழு பகீர் எச்சரிக்கை.!
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என்பதால், ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யவில்லை என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என்பதால், ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யவில்லை என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். நோய் தாக்கம் அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு முடக்கத்தை நீட்டிக்கவேண்டுமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவக் குழுவினர் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையை போன்று மதுரை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 30,000 பரிசோதனைகள் செய்யப்படுகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பிற்கு முதல்வருக்கு பரிந்துரைக்கவில்லை என மருத்துவக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு மட்டுமே நோய் பரவலுக்கு தீர்வாகாது. ஊரடங்கு நீட்டிப்பதில் எந்த பயனும் இல்லை. சென்னையில் ஊரடங்கு காரணமாக நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ முறைகளை கையாள திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது. தமிழகத்தில் 80% பேருக்கு லேசான அறிகுறிகளுடன் தான் கொரோனா இருப்பதால் பயப்பட வேண்டாம்.
மேலும்,பேசிய மருத்துவக்குழு அறிகுறிகள் தெரிந்தால் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். சுவை, மணம் தெரியாவிட்டால் காய்ச்சல் மையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றனர். இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனைகளை அதிகம் மேற்கொள்ளும் மாநிலம் தமிழகம் மட்டுமே. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அச்சப்படத் தேவையில்லை. உயிரிழப்பை குறைப்பதே நோக்கம். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். கடந்த 2,3 வாரங்களில் சிகிச்சை முறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. மேலும், வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களாலும் தமிழகத்தில் தொற்று அதிகரித்துள்ளது என்று மருத்துவக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.