சென்னையில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு இரவு நேர போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Various Orders Issued To Chennai Night Duty Police: தமிழ்நாட்டில் சமீபகாலமாக கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் போலீசார் விழிப்புடன் இருக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சென்னையை பொறுத்தவரை குற்றச்சம்பவங்களை தடுக்க முழுமையான கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இரவுப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பைக் ரேஸ் நடக்கக் கூடாது

இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ''இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படாத வகையில் வாகனத் தணிக்கை நடக்க வேண்டும். ரோந்து வாகன போலீசார், போஸ்டர் ஒட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டப்படும் போஸ்டர்களுக்கு அந்தப் பகுதி இரவு நேர போலீசார்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அண்ணா சாலை, கடற்கரை காமராஜர் சாலை உள்ளிட்ட எந்த சாலைகளிலும் பைக் ரேஸ் நடக்கக் கூடாது.

வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும்

பைக் ரேஸில் ஈடுபட்டு தப்பிப்போரை, அடுத்த செக்பாயிண்டில் தகவல் தெரிவித்து பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை சட்டம் ஒழுங்கு போலீசார் குற்றங்களை தடுக்கும் விதமாக வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும். அவசர அழைப்புகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும். எதுவும் நடக்கவில்லை என்று மழுப்பல் பதில் கூறக் கூடாது. புகார்தாரர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி முடிக்காமல், சம்பவ இடத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும்.

இரவுப் பணியில் ஓய்வு எடுக்கக் கூடாது

அதிகாலை 2 4 மணிக்கு வங்கிகள், ஏ.டி.எம்.களில் உள்ள காவலர்கள் தூங்கிவிடுவார்கள் என்பதால், அவர்களை அலெர்ட் செய்ய வேண்டும். இரவுப் பணியில் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் காவலன் செயலியில் பதிவேற்ற வேண்டும். ஒவ்வொரு ஏரியாக்களிலும் 2 தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்த வேண்டும். போதிய ஓய்வுக்குப் பிறகுதான் இரவுப் பணி வழங்கப்படுவதால், இரவுப் பணியில் ஓய்வு எடுக்கக் கூடாது.

காவல் நிலையத்தில் குற்றவாளிகளை வைத்திருக்கக் கூடாது

இரவு நேரத்தில் எந்த காவல் நிலையத்திலும் குற்றவாளிகளை வைத்திருக்கக் கூடாது. வாகன தணிக்கையைப் பார்த்து யாரும் வேகமாக வாகனங்களை இயக்கி தப்பிச் செல்வோரை விரட்டிப் பிடிக்காமல், அடுத்த செக்பாயிண்ட்க்கு தகவல் அளித்து அவர்களைப் பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.