வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 


ஆந்திரா, ஒடிசா இடையே வங்கக் கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும். தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் அந்தமான் கடல் பகுதிகள், தமிழகத்தின் கடலோரப்பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில், குமரிக்கடல் மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அதேபோல் அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 13ம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில், தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.