தமிழகத்தில் இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடலுறுப்புகளை தானம் பெறுவதற்காக 6 ,811 நபர்கள் பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2008 ம் ஆண்டு இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த ஹிதேந்திரன் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள், தானம் செய்யப்பட்டதன் நினைவாக ஹிதேந்திரன் மறைந்த செப்டம்பர் 23 ம் தேதி தமிழகத்தில் உடல் உறுப்பு தான தினமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது .இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அமைச்சர் மா. சுப்பிரமணியன். அப்போது பேசிய அவர், “உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. சோடோ எனும் தென்னிந்திய அளவிலான உறுப்பு தான அமைப்பிற்கு தமிழ்நாடு தலைமையாக உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எனவே இன்றைய நிகழ்வில் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், அந்தமான், லட்சத்தீவை சேர்ந்த மருத்துவத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஹிதேந்திரன் மறைந்த செப்டம்பர் 23 ம் தேதியும் , இந்தியளவில் ஆகஸ்ட் 3 ம் தேதியும் தேசிய உடலுறுப்பு தான நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது. மனிதபிமானத்திற்காக எத்தனை நாள் வேண்டுமானாலும் நடத்தலாம். உடலுறுப்பு தானம் வேண்டி தமிழகத்தில் பலர் காத்திருக்கின்றனர்.

அதன்படி , 6179 பேர் சிறுநீரகம் வேண்டியும், 449 பேர் கல்லீரல் வேண்டியும் , 72பேர் இதயம் வேண்டியும், 60 பேர் நுரையீரல் வேண்டியும் 24 பேர் இதயம், நுரையீரல் இரண்டும் வேண்டியும், கணையம் வேண்டி 1 நபர், கைகள் வேண்டி 26 பேர் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் உறுப்பு தானத்திற்காக யாருமே காத்திருக்காத நிலையை உருவாக்க வேண்டும். எனவே அனைவரும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்.

உறுப்பு தான தினமான இன்று , இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் அவர்களது உடல் அடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மனிதாபிமானத்துடன் அறிவித்துள்ளார். உறுப்பு தானம் பெறும் நடைமுறை 2008 ல் தொடங்கியது , தற்போது வரை 1726 உறுப்பு கொடையாளர்கள் மூலம் , 6327 உறுப்புகள் பெறப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டில் 313 கொடையாளர் மூலம் 1242 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு அதன் மூலம் 663 பேர் பயனடைந்துள்ளனர்.

டூப்ளிகேட் பான் கார்டு பெறுவது எப்படி.? முழு விபரம் இதோ !!

குழந்தை ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்வது தண்டனைக்குரிய குற்றம். அதுபோன்ற தவறுகளை கண்டறிந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பு தானத்தில் தமிழகத்தை சேர்ந்த பயனாளர்களுக்கே முன்னுரிமை தருகிறோம் , இத்திட்டத்தில் உயிர் காப்பதே முக்கியம் , மாநில எல்லை முக்கியம் இல்லை என்று கூறினார். முன்னதாக மேடையில் பேசிய மறைந்த ஹிதேந்திரனின் தந்தை மருத்துவர் அசோகன், “ உறுப்பு தானம் செய்வது என்பது பெரிய விசயமில்லை.

ஒருவர் மூளை இறப்பால் , காப்பாற்ற முடியாத சூழலுக்கு சென்ற பிறகுதான் உறுப்பு தானம் செய்கிறோம். எங்கள் மகன் ஹிதேந்திரன் உறுப்பை தானமாக செய்தபோது அதை பெரிதாக நினைக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் மருத்துவராக இருந்ததால் அதை பெரிய விசயமாக நினைக்கவில்லை. உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் உறவினர்களுக்கு வருத்தம் வேண்டாம். எங்கள் மகன் இறந்து 15 ஆண்டாகிவிட்டாலும் அந்த துயரம் இருக்கத்தான் செய்கிறது. 

ஆனால் ஹிதேந்திரன் உறுப்புகள் இன்னும் வாழ்கிறது , ஹிதேந்திரனின் கல்லீரை தானமாக பெற்ற கேரளாவை சேர்ந்த பெண் இரண்டாவது குழந்தை பெற்றுள்ளார், அவர்மிகவும் நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இன்னும் எங்களுடன் தொடர்பில் உள்ளார். உறுப்பு தானம் செய்தவர்களின் உறவினர்கள் வாழும் நாள் முழுவதும் நினைவில் வைத்து கொள்ளலாம். 15 ஆண்டுக்கு முன் நாங்கள் செய்த செயல் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொறியாக அது அமைந்துள்ளது” என்று கூறினார்.

ரயில் டிக்கெட் வாங்கினாலும் அபராதம் உண்டு.. இந்திய ரயில்வேயின் இந்த விதி தெரியுமா.? உஷார் மக்களே