மர்மமான முறையில் மருத்துவ மாணவி பிரதீபா உயிரிழந்த விவகாரம்.. பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி..!
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மருத்துவ மாணவி பிரதீபாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மருத்துவ மாணவி பிரதீபாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதி வருடம் படிப்பவர் பிரதீபா (22). இவர் சொந்த ஊர் வேலூர். பெரம்பூரில் தங்கியிருந்து படித்து வந்தார். கொரோனா பாதிப்பு காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களும் வைரஸ் தடுப்பு பணிக்கு தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இந்த மாணவர்கள் தங்கள் வீட்டுக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கியிருந்து வேலை பார்க்க வேண்டும் என்றும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி பிரதீபா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்தார். இவர் வீடு பெரம்பூரில் இருந்தாலும், அங்கு செல்ல அனுமதி இல்லாததால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள விடுதியிலேயே தனியாக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி முதல் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த மே 1ம் தேதி மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவி பிரதீபா மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. தற்கொலையா? அல்லது கொரோனாவா என பல்வேறு கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
முதற்கட்டமாக உயிரிழந்த மாணவியின் உடலை பிரதே பரிசோதனை செய்ததில் விஷம் அருந்தி தற்கொலை செய்யவில்லை என தெரியவந்தது. அவருக்கு கொரோனா சோதனையிலும் தொற்று இல்லை என அறிக்கை வந்தது. இந்நிலையில் அவரது உடல் பாகங்கள் தடய அறிவியல் துறைக்கு விஸ்ரா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. சோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. அது தொடர்பாக போலீசார் தரப்பு கூறுகையில், பிரேத பரிசோதனை இறுதி அறிக்கையான விஸ்ரா ஆய்வில் இதயவால்வு பிரச்சினையில் அடைப்பு ஏற்பட்டு மருத்துவ மாணவி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளனர். இதனால் மாணவியின் இறப்பில் கடந்த 18 நாட்களாக இருந்த மர்மம் விலகியது.