டெங்கு பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?... அறிக்கை சமர்ப்பிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு!
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் இருக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் இருக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் டெங்கு பரவுவதால், அந்த வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெங்கு கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, நீதிபதிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதால், கொசுவினால் பரவும் டெங்குவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் இருக்க கூடாது என்றும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மழை காலம் என்பதால் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் டெங்குவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், டெங்குவை கட்டுப்படுத்த இதுவரை எடுத்த நடவடிக்கைகளின் பலன் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும் படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர்.