போராட்டம் வாபஸ்... கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது..!
எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகளிலிருந்து கேஸ் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் கேஸ் கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்தந்தத்தின் அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5,500 வாகனங்களுக்கு சங்கத்தின் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், 4,800 வாகனங்களுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் வழங்கியது. இதனால் மீதமுள்ள 700 வாகனங்களுக்கு பணி ஒப்பந்தம் வழங்குமாறு சங்கத்தின் சார்பில் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டும் எண்ணெய் நிறுவனங்கள் செவிசாயிக்கவில்லை. இதனையடுத்து இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இது தொடர்பாக பேச்சு நடத்த மத்தியஸ்தர் நியமிக்கப்படுவார் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.