உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்...? தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு..!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. இதன் பிறகு பல்வேறு காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வந்தது. தேர்தல் நடத்தப்படாததால் நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் நெருக்கடியால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டது.
இதனிடையே, சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என இந்திய தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. இதனையடுத்து, முதல்முறையாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் கிராமங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் பரீசிலனை செய்து ஒதுக்கீடு செய்யும் என சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.