ப்ப்பா... தெறிக்கவிட்ட குடிமகன்கள்!! ஒரே நாளில் உச்சம் தொட்ட டாஸ்மாக் சரக்கு விற்பனை...!
இன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நேற்றே குடிமகன்கள் போட்டி, போட்டு சரக்குகளை வாங்கியுள்ளனர்.
தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல் குடிமகன்கள் அதிகம் கூடும் டாஸ்மாக் கடைகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வழக்கமாக பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிற டாஸ்மாக் கடைகள் இரவு பத்து மணி வரை இயங்கும். ஆனால் தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பகல் 12 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகள் இரவில் ஒரு மணி நேரம் முன்னதாக 9 மணிக்கே மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நேற்றே குடிமகன்கள் போட்டி, போட்டு சரக்குகளை வாங்கியுள்ளனர். அடுத்தடுத்து இரு தினங்களுக்கு விடுமுறை என்பதால் நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ரூ.63.44 கோடிக்கும், மதுரையில் ரூ. 59.63 கோடிக்கும், சேலத்தில் ரூ.55.93 கோடிக்கும், கோவையில் ரூ.56.37 கோடிக்கும் திருச்சியில் ரூ..56.72 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.